தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்10 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி தமிழக அரசு உத்தரவு

Spread the love

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் தான் பணியாளர்கள் சென்று வரவும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அ.தி.மு.க. அரசு, கொரோனா நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடையது வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிக குறைவாகவும் இருந்து வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவை 25.3.2020 முதல் அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்

கொண்டும், சில தளர்வுகளுடன் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே பல பணிகளுக்கு அனுமதி அளித்து பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் இந்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தற்போது பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர, மற்ற பகுதிகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் சென்று, அதிகபட்சம் 10 சதவீத பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முககவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்து அவசிய தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகபட்சம் 80 ஊழியர்களை கொண்டு இயங்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதிக ஊழியர்களை கொண்டு இயங்கும் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்த ஊழியர்கள் தங்களுக்கு போதாது, கூடுதல் ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவந்தன. அந்த அடிப்படையில், தற்போது 10 சதவீத ஊழியர்களுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ஊழியர்களைக் கொண்டு இயங்கும் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 200 முதல் 300 ஊழியர்களைக் கொண்டு இயங்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page