சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் கைதான 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Spread the love

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் கைதான 6 பேர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.


பூந்தமல்லி

குமரி மாவட்டம், களியக்காவிளையில் தமிழக – கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன், கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அப்துல் சமீம்(வயது 30), தவுபீக்(27), காஜா மொய்தீன்(53), மெகபூப் பாஷா(48), இஜாஸ் பாஷா(46), ஜாபர் அலி(26) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான இவர்களுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்பதால் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு(என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள், என்.ஐ.ஏ. அரசு தரப்பு வக்கீல் பிள்ளை ஆகியோர் நேற்று பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செந்தூர்பாண்டி முன்னிலையில் இந்த வழக்கில் கைதான 6 பேர் மீதும் 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பெங்களூருவில் இருப்பதாகவும், மும்பையில் இருந்து ஆயுதங்கள் வாங்கி வந்ததாகவும், போலீசாரை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு நடந்த படுகொலை என அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக அரசு தரப்பு வக்கீல் தெரிவித்தார்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும். ஆனால் தற்போது கொரோனா தாக்கம் என்பதால் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. அதனால் குற்றப்பத்திரிகை மட்டும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த கொலை வழக்கில் இவர்கள் சதி வேலையில் ஈடுபட சிம் கார்டுகளை வாங்கி கொடுத்ததாக கைதான 12 பேர் மீது கடந்த மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page