சிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி: லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

Spread the love

சிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையிலான பீப்பிள் ஆக் ஷன் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இவரது ஆட்சிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் லீ முன்னதாகவே தேர்தலை அறிவித்தார்.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் கொரோனா அச்சுறுத்தலை மீறி பாராளுமன்ற தேர்தல் நேற்று (ஜூலை 10) நடைபெற்றது. முககவசம், கையுறைகள் அணிந்தபடி மக்கள் பாதுகாப்பாக வாக்களித்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 8:00 மணிக்கு முடிந்தது. மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இதையடுத்து, வாக்குப்பதிவு எண்ணிக்கை பாதுகாப்புடன் நடைபெற்றது.

இந்தநிலையில், சிங்கப்பூர் தேர்தலில் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தம் நடைபெற்ற 93 இடங்களில் 83 இடங்களைக் கைப்பற்றி ஆளும கட்சி மீண்டும் ஆட்சியை அமைக்கவுள்ளது.

இந்நிலையில் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- சிங்கப்பூர் பிரதமர் லீ செயின் லூங் வெற்றிக்குப் பாராட்டுகள். சிங்கப்பூர் மக்கள் அமைதியான, வளமான எதிர்காலத்தைப் பெறுவதற்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page