தமிழக அரசு சித்த மருத்துவத்தை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுக்கிறது – அமைச்சர் பாண்டியராஜன்

Spread the love

தமிழக அரசு சித்த மருத்துவத்தை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுத்து வருவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.


சென்னை,

சென்னையில் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கொரோனா நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்ததாக விடியோ ஒன்றை வெளியிட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு சித்த மருத்துவத்தின் மீது பாகுபாடு காட்டுவதாக தெரிவித்தனர்.

மேலும், “தற்போது ஆங்கில மருந்துவம் செய்யும் பல ஆஸ்பத்திரிகளில், அலோபதி சிகிச்சை என்ற பெயரில் கபசுர குடிநீர் நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகின்றன. சித்த மருத்துவ சிகிச்சை தான் பல ஆஸ்பத்திரிகளில் வழங்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான சிறை கைதிகள் உள்பட 400 பேர் சித்த மருத்துவத்தினால் குணமடைந்துள்ளனர். ஒரு உயிர் பலி கூட ஏற்படவில்லை. சித்த மருத்துவம் குறித்து அரசிடம் இதுபோன்ற மனப்போக்கு இருந்தால், இந்த மருத்துவம் யாருக்கும் பயனின்றி போய் விடும். யாராவது கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து உள்ளது என்று கூறினால், அதை அரசு கவனத்துடன் எடுத்து பரிசீலிக்க வேண்டும்” என்றும் நீதிபதி கூறினர்.

இந்நிலையில் அமைச்சர் பாண்டியராஜன் இன்று சித்த மருத்துவ நிபுணர்களை சந்தித்து அவர்களிடம் கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ முறைகள் குறித்து கேட்டறிந்தார். இதன் பின்னர் செய்தியாள்ர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக அரசு சித்த மருத்துவத்தை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிவித்தார்.

பாரம்பரிய தமிழ் மருத்துவம் மிகுந்த பயனளிக்கக் கூடியது என்றும் திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் கொரோனா மையங்களில் சித்த மருத்துவம் பின்பற்றப்படுகிறது என்று அவர் கூறினார். மேலும் இதனை நிரூபிக்க உயர்நீதிமன்றம் அரசுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page