சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி,
சாத்தான்குளம் வியாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று தமிழகம் வந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
இந்த வழக்கில் இதுவரை கைப்பற்றப்பட்ட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த பின்னர், இந்த வழக்கில் தொடர்புடைய சாத்தான்குளம் காவல்நிலையம், கோவில்பட்டி சிறைச்சாலை, சாத்தான்குளம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களை நேரில் சென்று பார்வையிட சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதனை தொடர்ந்து இன்று காலை 11.30 மணியளவில் ஜெயராஜ்-பென்னிக்ஸின் வீட்டிற்கு சென்று அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு இரண்டாக பிரிந்து அதில் 4 பேர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
சாத்தான்குளத்தில் தாக்கப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சாட்சி அளித்துள்ள ஜெயராஜ்-பென்னிக்ஸின் உறவினர்கள் 2 பேரை உடன் அழைத்துச் சென்றுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், மருத்துவமனையில் அன்று நடந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.