சீனாவுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை: ஹாங்காங் சுயாட்சி சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார்

Spread the love

சீனாவுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கையான ஹாங்காங் சுயாட்சி சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார்.

வாஷிங்டன்,

ஹாங்காங் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு அண்மை காலமாக சீனாவுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வந்ததால் அவற்றை ஒடுக்கும் விதமாக புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா கொண்டு வந்துள்ளது.

இது ஹாங்காங்கின் சுதந்திரத்தையும் சுயாட்சியும் பறிக்கும் செயல் என அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் சீனாவுக்கு கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக இந்த விவகாரத்தில் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் ஹாங்காங்கின் சுயாட்சியை உறுதி செய்யும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஹாங்காங் சுயாட்சி சட்ட மசோதா கொண்டுவரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் இந்த சட்ட மசோதாவில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். அத்துடன் ஹாங்காங்குக்கு அமெரிக்கா வழங்கும் சிறப்பு முன்னுரிமைகளை ரத்து செய்யும் நிர்வாக உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டார்.

இதுகுறித்து டிரம்ப் கூறுகையில் “ஹாங்காங் மக்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு சீனாவை பொறுப்பேற்க வைக்கும் சட்டம் மற்றும் நிர்வாக உத்தரவில் நான் இன்று கையெழுத்திட்டேன். இந்த புதிய சட்டம் ஹாங்காங்கின் சுதந்திரத்தை அணைக்க முயற்சிக்கும் நபர்களை பொறுப்பேற்க வைப்பதற்கு எனது நிர்வாகத்துக்கு அதிகாரத்தை வழங்கும்“ என கூறினார்.

ஹாங்காங் விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. எனவே இது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page