கர்நாடகத்தில் 2 ஆயிரம் டாக்டர்கள் கூட்டாக ராஜினாமா – கலெக்டர்களிடம் கடிதம் கொடுத்தனர்

Spread the love

கர்நாடகத்தில் 2 ஆயிரம் டாக்டர்கள் கூட்டாக ராஜினாமா செய்தனர்.


பெங்களூரு,

மத்திய அரசின் ராஷ்டிரீய பால் சுவஸ்தய கர்மயகிரம் அமைப்பின் கீழ் கர்நாடகத்தில் செயல்பட்டு வரும் ஆயுஷ் மருத்துவமனைகளில் 1,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த டாக்டர்களும், அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆரம்ப சுகாதார மையங்களில் 590 ஒப்பந்த டாக்டர்களும் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒப்பந்த டாக்டர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம், சம்பள உயர்வு, பணி பாதுகாப்பு, பாதுகாப்பு மருத்துவ உபகரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு வைத்தனர். ஆனால் ஒப்பந்த டாக்டர்களை, பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் கொரோனா தடுப்பு பணிகளிலும் ஆயுஷ் டாக்டர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஆயுஷ் மருத்துவர்கள், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கர்நாடகத்தில் ஒப்பந்த டாக்டர்களின் சம்பளத்தை ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனாலும் சம்பள உயர்வை ஏற்க மறுத்த டாக்டர்கள் தங்களது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று அரசுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கர்நாடகத்தில் உள்ள ஆயுஷ், ஆரம்ப சுகாதார மையங்களில் வேலை பார்த்து வரும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள் கூட்டாக ஒரே நேரத்தில் தங்களது பணியை ராஜினாமா செய்தனர். இதுதொடர்பாக அவர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை, மாவட்ட கலெக்டர்களிடம் கொடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page