அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாக தேர்தல் ஆணையம் கடிதம்

Spread the love

கொரோனா பாதிப்புகள் உள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரம் பற்றிய அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வரும் பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் பயன்படுத்தி கைகளைக் கழுவ வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், வருகிற அக்டோபரில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டிக்கு தயாராகி வருகின்றன.

பீகார் தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு அளிப்பதற்கான வசதியை நீட்டிக்க போவதில்லை என தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்புகள் காரணமாக, தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பொது கூட்டங்கள் தொடர்பான ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆலோசனைகளை வரும் 31ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றும் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகளின் தலைவர்கள், பொதுச் செயலர்களுக்குத் தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page