தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் இல்லாத ஊரடங்கு: கடை வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

Spread the love

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப் பட உள்ளது.

சென்னை,

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தனது கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. கொரோனாவின் தாக்கம் நமது நாட்டிலும் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் காணப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

6-வது கட்டமாக கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் ஜூலை 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை அறிவிக்கப்பட்டது. எனினும் இந்த காலகட்டத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் தான் தளர்வு இல்லாத ஊரடங்கு உத்தரவு ஞாயிற்று கிழமைகளில் அமல்படுத்தப்படுகிறது. எனினும் மக்கள் ஞாயிற்றுக்கிழமைக்கு தேவையான மீன், இறைச்சி போன்ற அசைவ பொருட்களை இன்றே வாங்க கடை வீதிகளில் குவிந்தனர். இதனால், சென்னையில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. அதேபோல், பெரும்பாலான காய்கறி மார்க்கெட்டுகளிலும் மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page