கொரோனா தாக்கத்துக்கு 3 மாதங்களுக்கு முன்பே டிரம்பை எச்சரித்த நிபுணர்கள்; அறிக்கை தகவல்

Spread the love

கொரோனா வைரஸ் தாக்கம் வெளியுலகுக்கு தெரிவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே அமெரிக்க அதிபர் டிரம்பை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

வாஷிங்டன்,

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டு உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு வல்லரசான அமெரிக்கா அதிக இலக்காகி உள்ளது. அந்நாட்டில் 35 லட்சம் பேர் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1.3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்டோரை கொரோனா பாதித்துள்ளது.

எனினும், வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். ஆனால், சீனா உடனடியாக ஊரடங்கை அமல்படுத்தியதில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இன்று ஊரடங்கை தளர்த்தி அந்நாட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மத்தியில் கொரோனா வைரசால் ஒரு சிலர் பாதிப்படைந்த நிலையில், டிசம்பர் இறுதியில் வைரஸ் தொற்று பற்றி உலக சுகாதார அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று டிசம்பரில் பாதிப்புகளை ஏற்படுத்தி, அது வெளியே தெரிவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இதுபற்றி எச்சரிக்கப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகத்தில் பொருளாதார ஆலோசகர்கள் குழுவின் தலைவராக (பொறுப்பு) 3 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தவர் தோடாஸ் பிலிப்சன். பொருளாதார நிபுணரான இவரது தலைமையிலான குழுவின் 41 பக்க அறிக்கை ஒன்று கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டது.

அதில், உலக அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய தொற்று நோய் வரவிருக்கும் நாட்களில் பரவ கூடிய ஆபத்து உள்ளது என எச்சரிக்கை செய்திருந்தது. ஆனால், இந்த ஆலோசனை கண்டுகொள்ளப்படவில்லை.

அந்த அறிக்கையில், 5 லட்சம் அமெரிக்கர்களை பலி வாங்க கூடிய பெருந்தொற்று நோய் ஏற்பட கூடிய ஆபத்து உள்ளது. இதனால், அமெரிக்க பொருளாதாரத்தில் 3,700 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பாதிப்பு ஏற்பட கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டு இருந்தது.

இதன்பின்பே அமெரிக்காவுக்குள் கொரோனா பாதிப்பு நுழைய தொடங்கியது. அதன்பின்பும் அமெரிக்கா எச்சரிக்கையாக செயல்படாமல், ஊரடங்கு விதிகளை கடுமையாக பின்பற்றாமல் இருந்தது உள்ளிட்ட காரணங்களால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

பிலிப்சன் கடந்த ஜூன் மாதம் தனது பதவியில் இருந்து விலகினார். அவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் தனது ஆசிரியர் பணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அவர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.

கொரோனா வைரசை முன்பே கண்டறிவது சாத்தியமில்லாதது என்றும் அல்லது அதனை தடுக்க முடியாது என்றும் டிரம்ப் கூறிவந்த நிலையில், பிலிப்சனின் எச்சரிக்கை அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

இதுபற்றி பிலிப்சன் கூறும்பொழுது, தடுப்பு மருந்து கண்டுபிடிப்பின் வழியே பெருந்தொற்றின் கடுமையான பாதிப்புகளை குறைக்க முடியும் என்ற தலைப்பிலான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை மூத்த அதிகாரிகளிடம் கடந்த செப்டம்பரிலேயே அளித்தோம். பொருளாதார ஆலோசகர்கள் குழுவின் அறிக்கைகளை பற்றி வெள்ளை மாளிகை அதிகாரிகள் முழுவதும் அறிந்திருந்தனர் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page