கொரோனா வைரஸ் பாதிப்பு:பிரான்சில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ தாண்டியது

Spread the love

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிரான்ஸ் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ தாண்டியுள்ளது.

பாரீஸ்
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது, அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உலகம் முழுவதும், 14 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 81 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் உருவெடுத்த சீனாவின் உகான் நகரம் சுமார் 11 வாரங்களின் பின்னர் நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான நபர்கள் அடையாளம் காணப்படுவது இல்லாத நிலையில், அங்கு கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

எனினும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நாள் தோறும் அதிகளவானவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.இதன்படி, அமெரிக்காவில் கொரோனா பாதிப்பினால் 395,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 12,800 பேர் உயிரிழந்துள்ளனர்.இன்று ஒரே நாளில் அங்கு கொரோனா காரணமாக 2015 பேர் உயிரிழந்துள்ளனர். 21 ஆயிரம் பேர் வரையில் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

அதேநேரம், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் நியூயார்க் நகரம் கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைகுலைந்து போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நியூயார்க் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

பிரான்சில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 1417 பேர் பலியாகியுள்ள நிலையில், நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ தாண்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரான்ஸ் உள்ளது. இதன் காரணமாக நாட்டில் சில கடுமையான விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.இருப்பினும் மக்கள் இந்த வைரஸின் தீவிரத்தை தெரியாமல், தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவால் 10,000-க்கும் மேற்பட்ட உயிர்களை கொடுத்த நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தை பிரான்ஸ் பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page