சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சி.பி.ஐ. காவலில் உள்ள 3 போலீசாரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி,
சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை-மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீசார் நடத்திய கொடூர தாக்குதலில் உயிரிழந்த சம்பவத்தில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்டமாக ஜெயராஜ், பென்னிக்ஸின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த அன்று காவல்நிலையத்தில் பணியில் இருந்த அனைத்து போலீசாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து காவலர்கள் சாமத்துரை, வெயில்முத்து மற்றும் செல்லத்துரை ஆகிய 3 பேரையும் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து தற்போது அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் 3 பேரும் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்.
அங்கு அவர்களிடம் போலீசார் விசாரணையின் போது நடந்த சம்பவங்கள் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்கடுத்ததாக ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான இடங்களுக்கு 3 காவலர்களையும் அழைத்துச் சென்று விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.