நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசை கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால், பாரம்பரிய கலைகள் அழிந்துவிடும் – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

Spread the love

நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசை கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால், பாரம்பரிய கலைகள் அழிந்துவிடும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை,

கொரோனா ஊரடங்கு காரணமாக இசை நிகழ்ச்சிகள், கச்சேரிகள் உள்ளிட்டவை நடைபெறாமல் இருப்பதால் இசை கலைஞர்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதனால் பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கால் நலவாரியத்தில் பதிவு பெறாதவர்களுக்கும், உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க தவறியவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கட்டுமானத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, “கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கோயில்கள் திறக்க தடை, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மங்கல இசைக் கருவிகளை வாசிக்கும் நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசைக் கலைஞர்கள், கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட மனுவை நீதிபதிகள் நினைவுக் கூர்ந்தனர்.

ஏற்கனவே நலிந்த கலைஞர்களாக கருதப்படும் இசைக் கலைஞர்கள், இத்தகைய கொரோனா பேரிடர் காலத்தில் மிகப்பெரிய பொருளாதார பிரச்சினைகளை சந்தித்து வருவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசை கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால்,பாரம்பரிய கலைகள் அழிந்துவிடும் என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

பின்னர் இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்திற்காக விசாரணையை ஜூலை 28ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page