ஊரடங்கு தளர்வு; மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே எதிர்ப்பு

Spread the love

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் தான் முதலிடம் வகிக்கிறது.


மும்பை,

கொரொனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை தளர்த்துவதில் அவசரம் காட்டக் கூடாது என்று மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். சாம்னா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் உத்தவ் தாக்கரே இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே கூறியிருப்பதாவது: “ கோவிட் 19 (கொரோனா) -க்கு எதிரான போர் இதுவாகும். ஊரடங்கை தளர்த்திய நாடுகள் எல்லாம் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த தொடங்கி விட்டன. ஆஸ்திரேலியாவை பாருங்கள் அவர்கள் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

பொருளாதாரம் மோசமான நிலைக்குச் செல்வதால் ஊரடங்கை தளர்த்த வேண்டும் என்று அனைவரும் கூறுவதை பார்க்க முடிகிறது. பொருளாதாரம் கடும் பாதிப்பு அடைந்துள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால், கொரோனா பெருந்தொற்றால் மக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு உயிரிழந்தால், அவர்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்களா? நான் டொனால்டு டிரம்ப் அல்ல, எனது மக்கள் என் கண்முன்னால் பாதிக்கப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

ஊரடங்கு தளர்வு படிப்படியாகவே இருக்க வேண்டும். மக்கள் மிகவும் சோர்வடைந்து உள்ளார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், ஒரே வேளையில், அனைத்து தளர்வுகளையும் என்னால் அறிவித்துவிட முடியாது” என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page