அமெரிக்க காவலில் உள்ள சீன பெண் விஞ்ஞானி திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாஷிங்டன்
அமெரிக்காவின் அறிவுசார் வளங்களைக் திருடுவது, அமெரிக்காவை உளவு பார்ப்பது போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகளை சீனா மீது அமெரிக்கா சாட்டியுள்ளது.
அமெரிக்க- சீன உறவுகள் மோசமடைந்து வருகிறது. சீனா தனது ஹூஸ்டன் தூதரகத்தை மூட வேண்டும் என்ற அமெரிக்க உத்தரவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக செங்டுவில் உள்ள தனது துணைத் தூதரகத்தை மூடுமாறு சீனா வெள்ளிக்கிழமை அமெரிக்காவிற்கு உத்தரவிட்டது.
சீன ராணுவத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி ஜுவான் டாங் என்பவர் ஆய்வு மாணவி என்ற போலியான காரணத்தை கூறி விசா விண்ணப்பம் செய்திருப்பதை கண்டுபிடித்து எப்பிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சீனாவின் துணைத் தூதரகத்தில் அமெரிக்கா அதிகாரிகளிடம் தஞ்சம் புகுந்த சீன விஞ்ஞானி இப்போது அமெரிக்கக் காவலில் உள்ளார், திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வாரம் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தகவல்களின்படி,
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஜுவான், சீன இராணுவத்தில் பணியாற்றவில்லை என்று தனது விசா விண்ணப்பத்தில் பொய்யாகக் கூறினார். அவர் மீது ஜூன் 26 அன்று விசா மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.இந்த வழக்கு குறித்து சீன தூதரகம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
வியாழக்கிழமை இரவு ஜுவான் தடுத்து காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஒரு தூதரக அதிகாரியாக அறிவிக்கப்படாததால் தூதரகத்திடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை என்றும் நீதித்துறை மூத்த அதிகாரி தெரிவித்தார்.
விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது தங்களது இராணுவ உறவை மறைத்த குழுவின் ஒரு பகுதியாக டாங் இருப்பதாக அந்த அதிகாரி கூறினார்.
கலிபோர்னியாவின் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் லாரன் ஹார்வுட், டாங் சாக்ரமென்டோவில் திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறினார்.