மேற்கு வங்காளத்தில் ஆகஸ்டு 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப் படுவதாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொல்கத்தா,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 5-வது கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இருந்த போதிலும் மக்களின் பொருளாதார தேவைகளை கருத்தில் கொண்டு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே 5-வது கட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாததால் ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா என்பது குறித்து பல்வேறு மாநிலங்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
அந்த வகையில் கொரோனாவால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்காள மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மூத்த அரசு அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி மேற்குவங்காளத்தில் ஆகஸ்டு 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
மாநிலம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஊரடங்கு ஆகஸ்டு 31-ந் தேதி வரை தொடரும். அதேபோல் மாநிலம் முழுவதும் வாரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அடுத்த மாதம் இறுதி வரை அமலில் இருக்கும்.
வழக்கமாக வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த மாதத்தில் பக்ரீத், சுதந்திர தினம் ஆகிய பொது விடுமுறை நாட்கள் சனிக்கிழமைகளில் வருவதால் வேறு சில நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
அதன்படி ஆகஸ்டு 2, 5, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும் அதன் பிறகு 16, 17, 23, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளிலும் என மொத்தம் 9 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆகஸ்டு 31-ந் தேதி வரை மூடப்பட்டிருக்கும். அவற்றை மீண்டும் திறப்பது குறித்து செப்டம்பர் மாதத்தில் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.