பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Spread the love

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகில் மன்னிக்கக் கூடாத குற்றம் ஒன்று உண்டு என்றால், அது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்தான். ஆனால், இந்த குற்றங்களை செய்தவர்கள் சாதாரண வழக்குகளில் கைது செய்யப்படுவதும், கைது செய்யப்பட்ட சில காலங்களிலேயே ஜாமீனில் விடுதலை செய்யப்படுவதும் அண்மைக்காலமாக அதிகரித்து விட்டது. இது அறத்திற்கு எதிரான நடவடிக்கை ஆகும்.

கந்தசஷ்டி கவசம் பாடலை கொச்சைப்படுத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பது வரவேற்கத்தக்கது. காவல்துறையினரின் இத்தகைய நடவடிக்கைகள் அனைத்து வகையான குற்றங்களுக்கு எதிராகவும் நீட்டிக்கப்பட வேண்டும். குறிப்பாக பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களை செய்த குற்றவாளிகள், இனியும் ஒரு முறை அத்தகைய இழிசெயலை செய்வது குறித்து நினைத்துக்கூட பார்க்கக்கூடாது எனும் அளவுக்கு தண்டனைகள் சட்டத்திற்கு உட்பட்டு கடுமையாக இருக்க வேண்டும்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக எந்த வக்கீல்களும் ஆஜராகக்கூடாது. பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் நடமாடும் பூமியாக தமிழகத்தை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page