தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பு இப்போது இல்லை: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

Spread the love

தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பு தற்போதைக்கு இல்லை என்று கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணை பகுதியில் ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் மற்றும் அணுகுசாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையிலான அ.தி.மு.க. அரசு பல்வேறு திட்டப்பணிகளை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. கொடிவேரி அணை பகுதியை சுற்றுலா தலமாக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளன. குற்றாலத்தைப் போல இந்த கொடிவேரி அணை அமைந்துள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பாதிப்பு நீங்காத நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களின் திறப்பு இப்போது இல்லை. பெற்றோர்களின் கருத்துகளை கேட்டு பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். மறுதேர்வு எழுதிய 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பார்.

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மதிப்பெண்கள் முறையா அல்லது கிரேடு முறையா என்பது குறித்து அரசு வெளியிட்ட பின்பு தெரிந்து கொள்ளலாம்.

பிளஸ்-2 மறுதேர்வை எத்தனை மாணவர்கள் வேண்டுமானாலும் எழுதலாம் என அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்திருந்தது. ஆனால், குறைவான மாணவர்கள் தான் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களுக்கும் தக்க பாதுகாப்பை இந்த அரசு வழங்கியுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page