கேரளாவில் ஒரே கிராமத்தில் 200 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

வயநாடு,
கேரளாவின் வயநாடு மாவட்டத்துக்கு உட்பட்ட வலாடு கிராமத்தை சேர்ந்த 2 குடும்பத்தினரின் உறவினர் ஒருவர் சமீபத்தில் கோழிக்கோட்டில் கொரோனாவால் உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு திரும்பிய இந்த குடும்பத்தினரில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதைப்போல அங்குள்ள மற்றொரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கடந்த வாரம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அங்கிருந்து திரும்பிய அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் மூலம் அந்த கிராமத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதில் நேற்று முன்தினம் வரை 169 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. நேற்று அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் மேலும் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 199 பேர் வலாடு கிராமத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அந்த கிராமத்தில் இரவு பகலாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்த கிராமம் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மட்டும் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
ஒரே கிராமத்தில் மட்டும் சுமார் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.