சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Spread the love

சென்னையில் ஆலந்தூர், சென்டிரல், கோயம்பேட்டில் உள்ள 3 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர் சூட்டப்படுவதாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2003-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசால் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அந்த ஆய்வின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான 23 கிலோ மீட்டர் தூர வழித் தடம் மற்றும் சென்டிரல் ரெயில் நிலையம் முதல் பரங்கிமலை வரையிலான 22 கிலோ மீட்டர் தூர வழித்தடம் என இரு வழித்தடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ரூ.18,380 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்துவதற்கு தேவையான மாநில அரசின் நிலங்கள் மற்றும் நிதி பங்களிப்பினை வழங்கிய பெருமை மறைந்த ஜெயலலிதாவையே சாரும். சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை செம்மையாக செயல்படுத்துவதற்காக, தொடர் ஆய்வுகளை நடத்தி பணிகளையும், பயணிகள் சேவைகளையும் ஜெயலலிதா துவக்கி வைத்துள்ளார்.

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் – கட்டம்-1-ன் கீழ், ஆலந்தூர் மெட்ரோ, சென்டிரல் மெட்ரோ மற்றும் புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ நிலையங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகவும், பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன. மேற்கண்ட மெட்ரோ நிலையங்களின் பெயர் களை நமது மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை சிறப்பிக்கும் வகையில் மாற்றி அமைக்கலாம் என்ற உயர்மட்டக் குழுவின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அதன்படி, சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பன்னாட்டு முனையம் என்று பெயரிட்டதைப் போல், ஆலந்தூர் மெட்ரோ என்பது “அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ” என்றும்; சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு “புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரெயில் நிலையம்” என்று பெயர் வைத்ததைப்போல சென்டிரல் மெட்ரோ என்பது “புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்டிரல் மெட்ரோ” என்றும்; மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆசியாவில் மிகப்பெரிய பேருந்து முனையமான சென்னை புறநகர் பேருந்து நிலையத்தையும், அங்கு அமைந்துள்ள மெட்ரோ நிலையத்தையும் திறந்து வைத்ததாலும், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை நினைவு கூறும் வகையில், புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ என்பது “புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ” என்றும் பெயர் மாற்றங்கள் செய்து நான் ஆணையிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page