வெளிநாட்டில் மருத்துவம் படிக்க ‘நீட்’ தேர்வில் விலக்கு; கோரிக்கையை பரிசீலிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

Spread the love

வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவிக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி ஐகோர்ட்டில் மாணவி ஒருவர் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள புகாரா மாநில மருத்துவ கல்லூரியில் மருத்துவ இளங்கலை படிப்பு படிக்க விரும்புகிறேன். அதில் சேருவதற்கான கடைசி தேதி ஆகஸ்டு 20-ந் தேதி ஆகும்.

வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் இந்தியர்கள், இந்தியாவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது விதிமுறை.

ஆனால், கொரோனா காரணமாக, 2 தடவை தள்ளி வைக்கப்பட்ட நீட் தேர்வு, செப்டம்பர் 13-ந் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கடைசி தேதிக்குள் நான் நீட் தேர்ச்சி பெற இயலாது. ஆகவே, இதை ஒரு விதிவிலக்காக கருதி, எனக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதி காமேஸ்வர் ராவ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி கூறியதாவது:-

இந்த கோர்ட்டில் முறையிடுவதற்கு முன்பாக, அதிகாரிகளை மாணவி அணுகவில்லை. ஆகவே, இந்த மனுவை கோரிக்கையாக கருதி, மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இந்திய மருத்துவ கவுன்சில் ஆலோசனை நடத்தி, 3 வாரங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும். அந்த முடிவை மாணவியிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page