தொற்று அறிகுறிகள் தெரிய 8 நாட்கள் ஆகலாம்: கொரோனா வைரஸ் அடைகாக்கும் காலம் நீளுகிறது

Spread the love

கொரோனா வைரஸ் அடைகாக்கும் காலம் நீளுவதால் தொற்று அறிகுறிகள் தெரிய 8 நாட்கள் வரை ஆகலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பீஜிங்,

கொரோனா வைரஸ் என்ற பெயரை கேட்டாலே அஞ்சி நடுங்குகிற அளவுக்கு, இன்றைக்கு அந்த வைரஸ் உலகை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

இந்த வைரஸ் தொற்று அடைகாக்கும் காலம் பற்றி சீன விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி உள்ளனர். இதற்கு முன்பு அடைகாக்கும் காலம் என்பது 4 அல்லது 5 நாட்கள் என்று கூறப்பட்டு வந்தது.

ஆனால் இந்த அடைகாக்கும் காலம் இப்போது 8 நாட்கள் வரை நீளுவதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை ஆராய்ந்துதான் விஞ்ஞானிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

தொற்று பாதிப்புக்கு ஆளானவர்கள் அதற்கான அறிகுறிகளை காட்டத்தொடங்கும் காலம்தான் அடைகாக்கும் காலம் ஆகும். இந்த ஆய்வு முடிவுகள், ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ என்ற அறிவியல் பத்திரிகையில் வெளியாகி உள்ளன.

மிக குறைவான எண்ணிக்கையிலான மாதிரிகளையும், குறைந்த அளவிலான தரவுகளையும், பாதிக்கப்பட்டவர்களின் சுய அறிக்கைகள் அடிப்படையிலும் அடைகாக்கும் காலம் 4 அல்லது 5 நாட்கள் என்று கூறப்பட்டு வந்தது என பீஜிங் சீன பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சோங் யூ உள்ளிட்டவர்கள் கூறுகின்றனர்.

தற்போது இவர்கள் நடத்தியுள்ள ஆய்வில், அடைகாக்கும் காலங்களை மதிப்பிடுவதற்கு குறைந்த செலவிலான அணுகுமுறை ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

அந்த அணுகுமுறையின் அடிப்படையில், 1,084 கொரோனா நோயாளிகளை ஆராய்ந்துள்ளனர். இந்த நோயாளிகள் கொரோனா வைரஸ் முதன்முதலாக தோன்றி வெளிப்பட்ட உகான் நகருடன் பயண தொடர்பில் இருந்தவர்கள்.

இவர்களின் சராசரி அடை காக்கும் காலம் என்பது 7.75 நாட்கள் ஆகும்.

10 சதவீத நோயாளிகள் அடை காக்கும் காலம் 14.28 நாட்கள் என காட்டி உள்ளனர்.

14 நாட்கள் தனிமப்படுத்தலை நிலையாக வைத்துள்ள சுகாதார அதிகாரிகளுக்கு இது கவலை தரக்கூடும் என விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

ஆனால் இந்த அணுகுமுறை பல அனுமானங்களை நம்பி இருப்பதாகவும், வைரஸ் மாற்றம் அடைந்துள்ள உலகின் பல்வேறு நிகழ்வுகளுக்கு இது பொருந்தாது என்றும் விஞ்ஞானிகள் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page