மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி பலியான மேலும் 3 பேரின் உடல்கள் மீட்பு: சாவு எண்ணிக்கை 52 ஆக உயர்வு

Spread the love

மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான மேலும் 3 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இதனால் சாவு எண்ணிக்கை 52 ஆக உயர்ந்தது.


மூணாறு,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்த குடியிருப்பு பகுதியில், கடந்த 7-ந்தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், குடியிருப்பு பகுதியில் இருந்த 20 வீடுகள் அப்படியே மண்ணுக்குள் புதைந்தன. மேலும் அவற்றில் வசித்த தமிழக தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர். நிலச்சரிவை தொடர்ந்து, கேரள தீயணைப்பு படை வீரர்கள், போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் என 600-க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 4 நாட்களாக நடந்த மீட்பு பணியில் 49 பேர் இறந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நேற்று 5-வது நாளாக மீட்பு பணி தொடர்ந்தது.

பெட்டிமுடி பகுதியில் தொடர்ந்து கொட்டித்தீர்க்கும் கனமழையையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் நிலச்சரிவில் சிக்கி பலியான மேலும் 2 பேரின் உடல்கள் அழுகிய நிலையில் நேற்று மீட்கப்பட்டன. ஆனால் அவர்களது முகம், உடல்கள் சிதைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் தெரியவில்லை.

இதேபோல் நிலச்சரிவின்போது ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிலர், தொழிலாளர்கள் குடியிருப்பு அருகில் ஓடும் கல்லார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இருப்பதாக சொல்லப்பட்டது. இதனால் மீட்பு படையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ஆற்றுப்படுகையில் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது அங்கு அழுகிய நிலையில் ஒரு சடலம் ஆற்றில் மிதந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஆற்றில் வேறு ஏதேனும் உடல்கள் கிடக்கிறதா? என மீட்பு படையினர் தேடி வருகின்றனர். நேற்று 3 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதன் மூலம், நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page