தமிழகத்தில் ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ் கிடைத்துள்ளதாக தகவல்

Spread the love

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் இ-பாஸ் என்னும் நடைமுறை அமலுக்கு வந்தது. இதன்படி ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கோ, ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கோ செல்ல வேண்டுமென்றால் இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டது. இ-பாஸ் நடைமுறையை மத்திய அரசு ரத்து செய்த போதிலும், தமிழகத்தில் இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தது.

 

மண்டலம் விட்டு மண்டலம் என்ற நிலை மாறி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற கடுமையான விதி பின்பற்றப்பட்டது. திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை போன்ற அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் அளிக்கப்பட்டு வந்தது. மற்ற காரணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பித்தாலும் கிடைக்காத நிலை இருந்து வந்தது.

இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். இ-பாஸ் பெறுவதற்கு இடைத்தரகர்கள் லஞ்சம் வாங்கிய சம்பவமும் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய கோரிக்கை வலுத்தது.

இந்த நிலையில், 17-ந் தேதி (நேற்று) முதல் ஆதார் அல்லது ரேஷன் அட்டை விவரங்களுடன் செல்போன் எண்ணை இணைத்து விண்ணப்பித்தால் எந்தவித தாமதமும் இன்றி உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் விண்ணப்பித்து, இ-பாஸ் பெற்றுக்கொண்டு பயணிக்கலாம் என்றும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார்.

அதன்படி இ-பாஸ் நடைமுறை தளர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அத்தியாவசிய காரணங்களுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஆன்லைனில் விண்ணப்பித்தோருக்கு உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து நேற்று ஏராளமானோர் வாகனங்களில் சென்னையை நோக்கி படையெடுத்தனர். இ-பாஸ் எளிதாக கிடைத்ததாலும், போலீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் கெடுபிடி இல்லாததாலும் மக்கள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் தமிழகத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் என்ற நடைமுறை அமலுக்கு வந்த நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஒரே நாளில் 1.20 லட்சம் பேர் இ-பாஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page