இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டது. ஒரே நாளில் 70 ஆயிரம்பேருக்கு தொற்று உறுதியானது.

புதுடெல்லி,
உலகையே நடுங்க வைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் தன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. நேற்றுமுன்தினம் இந்தியாவில் 64 ஆயிரத்து 531 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 69 ஆயிரத்து 652 பேருக்கு தொற்று உறுதியானது. இது முன் எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சம் ஆகும். இதன்மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 28 லட்சத்து 36 ஆயிரத்து 925 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் இந்தியாவில் 9 லட்சத்து 18 ஆயிரத்து 470 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதின் விளைவாகத்தான் தொற்று பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 977 பேர் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர். நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் (1,092) நேற்று பலி எண்ணிக்கை சற்றே குறைந்திருப்பது ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது. அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 346 பேர் இறந்திருக்கிறார்கள். அதற்கு அடுத்து நிலையில் கர்நாடகத்தில் 126 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகத்துக்கு அடுத்து தமிழகத்தில் கூடுதல் உயிர்ப்பலி நேர்ந்துள்ளது.
ஆந்திராவில் 86 பேரும், உத்தரபிரதேசத்திலும், மேற்கு வங்காளத்திலும் தலா 53 பேரும் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப்பில் 23, மத்திய பிரதேசத்தில் 18, குஜராத்தில் 17, ஜார்கண்டில் 15, உத்தரகாண்டில் 14, ராஜஸ்தானில் 12, பீகாரிலும், ஜம்மு காஷ்மீரிலும் தலா 11, அசாமிலும், ஒடிசாவிலும், தெலுங்கானாவிலும், அரியானாவிலும் தலா 10, டெல்லியில் 9, கோவாவில் 8, கேரளாவில் 7, புதுச்சேரியில் 6, சத்தீஷ்காரில் 3, சண்டிகாரிலும், லடாக்கிலும், சிக்கிமிலும் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 866 ஆக உயர்ந்துள்ளது. இதில் மராட்டியம் முதல் இடத்தில் தொடர்கிறது. இந்த மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 33 ஆக உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகம் (6,123) உள்ளது. 3-வது இடத்தில் கர்நாடகம் (4,327) இருக்கிறது.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி கொண்ட மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகம் (4,327), டெல்லி (4,235), ஆந்திரா (2,906), குஜராத் (2,837), உத்தரபிரதேசம் (2,638), மேற்கு வங்காளம் (2,581), மத்திய பிரதேசம் (1,159) உள்ளன. இந்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.