வங்கி கடன் தவணை மீதான வட்டி விதிப்பு குறித்த நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி,
கொரோனா பாதிப்பின் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை குறைக்க, வங்கிகளில் பெற்ற கடன்களுக்கான மாதத் தவணையை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கவும், அந்த அவகாச காலத்தை கடன் பெற்றவர்களின் ‘சிபில்’ ஸ்கோர்களில் சேர்க்கக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்தது.
இதை மீறி வங்கிகள் கடன் பெற்றவர்களிடம் இருந்து தொடர்ந்து வட்டி வசூலிப்பதாகவும் அப்படி வட்டியை வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி கஜேந்திர சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கொரோனா நோய்த் தொற்று பரவலான நிலையில் ரிசர்வ் வங்கி அறிவித்த சலுகை காலத்தில் வங்கி கடன் தவணை மீது வட்டி வசூலிப்பது சரியல்ல என்று கருத்து தெரிவித்து இருந்தது. இது குறித்து மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் நேற்று மீண்டும் நடைபெற்றது.
அப்போது நீதிபதிகள், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் வங்கி கடன் தவணை மீதான வட்டியை வசூலிப்பதை நிறுத்தி வைப்பதற்கு மத்திய அரசுக்கு போதிய அதிகாரம் உள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் பின்பு ஒளிந்து கொண்டு, தங்கள் நிலைப்பாட்டை இதுவரை மத்திய அரசு தெரிவிக்கவில்லை என்று கூறினார்கள்.
இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கோர்ட்டு கூறுவது போல அல்ல என்றும் மத்திய அரசு, ரிசர்வ் வங்கியுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது என்றும் கூறினார். மேலும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பொதுவான ஒரே தீர்வு இருக்க முடியாது என்றும், மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க ஒரு வாரகால அவகாசம் தேவைப்படும் என்றும் கூறினார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல் தன்னுடைய வாதத்தில், கொரோனா நோய்த்தொற்றை தொடர்ந்து வங்கி கடன் மீதான தவணைகளை செலுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி முன்பு அறிவித்த சலுகை வரும் 31-ந் தேதியுடன் முடிவடைகிறது என்றும், இதை மேலும் நீட்டிக்க வேண்டும் என்றும், இந்த மனுவின் மீதான விசாரணை முடிவடையும் வரையில் இந்த சலுகையை முடிவுக்கு கொண்டு வரக்கூடாது என்றும் கோரினார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்தும், ரிசர்வ் வங்கி அறிவித்த சலுகை காலத்தில் கடனாளிகள் தங்கள் கடன் தவணை மீதான வட்டி மீது மேலும் வட்டி செலுத்துவது தொடர்பான நிலைப்பாட்டையும் மத்திய அரசு ஒருவாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.