இந்தியாவில் 3 நாளுக்கு பின்னர் தொற்று பாதிப்பு அதிகரித்தது. ஒரே நாளில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 22-ந் தேதி 69 ஆயிரத்து 874 பேருக்கு தொற்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 3 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து முறையே 69 ஆயிரத்து 239, 61 ஆயிரத்து 408, 60 ஆயிரத்து 975 என பதிவானது. இந்த நிலையில் நேற்று திடீரென தொற்று பாதிப்பு அதிகரித்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் 67 ஆயிரத்து 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவின் பிடியில் சிக்கியோர் எண்ணிக்கை 32 லட்சத்து 34 ஆயிரத்து 474 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் தொடர்ந்து மராட்டியம் முதல் இடத்தில் (7 லட்சத்து 3 ஆயிரத்து 823) உள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் ஆந்திரா (3 லட்சத்து 71 ஆயிரத்து 639) உள்ளது.
இந்தியாவில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 848 பேர் பலியாகினர். ஆனால் நேற்று பலி எண்ணிக்கை 1059 ஆக அதிகரித்துள்ளது. இதில் மராட்டியத்தில் மட்டுமே 329 பேர் பலியாகி இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் 148 பேர் மரணம் அடைந்துள்ளனர். 3-வது அதிக உயிரிழப்பு தமிழகத்தில் நேர்ந்துள்ளது.
மற்ற மாநிலங்களை பொறுத்தமட்டில், ஆந்திராவில் 92, உத்தரபிரதேசத்தில் 72, மேற்கு வங்காளத்தில் 58, பஞ்சாப்பில் 49, குஜராத்தில் 20, மத்திய பிரதேசத்தில் 19, டெல்லியிலும், ஜார்கண்டிலும் தலா 17, சத்தீஷ்காரில் 15, ஜம்மு காஷ்மீரில் 14, ராஜஸ்தானில் 13, தெலுங்கானா, கேரளா, அரியானாவில் தலா 10 பேர் இறந்துள்ளனர்.
கோவாவிலும், ஒடிசாவிலும் தலா 9 பேரும், அசாமிலும், புதுச்சேரியிலும் தலா 8 பேரும், உத்தரகாண்டில் 6 பேரும், திரிபுராவிலும், பீகாரிலும் தலா 5 பேரும், சண்டிகாரில் 3 பேரும், அந்தமான் நிகோபாரிலும், மணிப்பூரிலும் தலா 2 பேரும், இமாசலபிரதேசத்திலும், லடாக்கிலும் தலா ஒருவரும் கொரோனாவால் மரணம் அடைந்திருக்கிறார்கள்.
மராட்டியம் முதல் இடம்
இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 59 ஆயிரத்து 449 ஆக உயர்ந்துள்ளது.
உயிர்ப்பலியிலும் மராட்டிய மாநிலமே முதல் இடத்தில் (22 ஆயிரத்து 794) உள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. மூன்றாம் இடத்தில் கர்நாடகம் (4,958) உள்ளது.
டெல்லியில் 4,330, ஆந்திராவில் 3,460, உத்தரபிரதேசத்தில் 3,059, குஜராத்தில் 2,928, மேற்கு வங்காளத்தில் 2,909, மத்திய பிரதேசத்தில் 1,265, பஞ்சாப்பில் 1,178 பேர் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர்.
1000-க்கு கீழே இறப்புகளை பதிவு செய்துள்ள மாநிலங்களாக, யூனியன் பிரதேசங்களாக ராஜஸ்தான், தெலுங்கானா, ஜம்மு காஷ்மீர், அரியானா, பீகார், ஒடிசா, ஜார்கண்ட், அசாம், கேரளா, சத்தீஷ்கார், உத்தரகாண்ட், புதுச்சேரி, கோவா ஆகியவையும், 100-க்கு கீழே பலியை சந்தித்துள்ள மாநிலங்களாக, யூனியன் பிரதேசங்களாக திரிபுரா, சண்டிகார், அந்தமான் நிகோபார், இமாசலபிரதேசம், லடாக், மணிப்பூர், நாகலாந்து, மேகாலயா, அருணாசலபிரதேசம், சிக்கிம், தத்ராநகர் ஹவேலி தாமன் தியு ஆகியவையும் இருக்கின்றன.
நாட்டில் தற்போது கொரோனாவில் இருந்து மீள்வதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்து 7 ஆயிரத்து 267 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 21.87 சதவீதம்தான்.இந்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சம் வெளியிட்டுள்ளது.
உலகளவில் 2 கோடியே 41 லட்சத்து 12 ஆயிரத்து 116 பேர் தொற்றுக்கு ஆளான நிலையில், 8 லட்சத்து 24 ஆயிரத்து 712 பேர் மரணம் அடைந்துள்ளனர். மிக மோசமான பாதிப்பை சந்தித்து வருகிற நாடுகளில் முதல் இடத்தில் அமெரிக்கா தொடர்கிறது. அங்கு 59.62 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 1.82 லட்சம் பேர் பலியாகியும் உள்ளனர். 2-ம் இடத்தில் பிரேசில் நீடிக்கிறது. அங்கு 36.74 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டு, 1.16 லட்சம் பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். மோசமான பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் தொடர்கிறது.
இந்த தகவல்களை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் வெளியிட்டுள்ளது.