கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்.14ஆம் தேதி கூடுகிறது

Spread the love

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்.14ஆம் தேதி முதல் அக்.1ஆம் தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முன்னதாகவே முடித்து வைக்கப்பட்டது. நாடாளுமன்ற இரு சபைகளுமே மார்ச் 23-ந் தேதி ஒத்திவைக்கப்பட்டன.

தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் கட்டுப்பாடுகள் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலாக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை நடத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. சமூக இடைவெளியுடன் நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

 

இதற்காகவே நாடாளுமன்ற இரு சபைகளிலும் இருக்கைகள் மாற்றி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் செப்டம்பர் 14-ந் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிக்கையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார். இக்கூட்டத் தொடரில் வரலாறு காணாத பொருளாதார சரிவு, சீனாவின் ஊடுருவல் முயற்சி உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பக் கூடும் என்று தெரிகிறது.

கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முதன் முறையாக செப். 14ஆம் தேதி முதல் அக்.1ஆம் தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை காலை 9 மணிக்கும், மாநிலங்களவை பிற்பகல் 3 மணிக்கும் கூடுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும், கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page