தயாராக இருக்க வேண்டும் அக்டோபரில் கொரோனா தொற்று அதிகமாகலாம் கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை,
தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தலைமைச் செயலகத்தில் நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கே.சண்முகம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் இன்னும் முக்கிய கட்டத்தில் தான் இருக்கிறோம். எனவே பாதுகாப்பு நடவடிக்கைகளை விட்டுவிட்டு மனநிறைவு அடைந்து விட வேண்டாம். தற்போது சூழ்நிலைகள் மாறியிருக்கின்றன.
பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. கொரோனா மேலாண்மையில் மிக மோசமான காலக்கட்டம் இனி தான் வர இருக்கிறது.
போக்குவரத்து, வர்த்தக நடவடிக்கைகள், தொழிற்சாலைகளை திறந்துவிட்டிருப்பதால் வரும் அக்டோபர் மாதத்தில் கொரோனா தொற்று மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை எதிர்கொள்ள தயாராக இருங்கள்.
மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். நோயின் நிலையை கண்டறிந்து முழு கவனமுடன் இருந்து வரும் காலத்தில் எந்த சூழ்நிலையையும் கையாள தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.