கொரோனா நோயினால் உயிரிழக்கும் தேர்தல் பணியாளர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

Spread the love

கொரோனா நோயினால் உயிரிழக்கும் தேர்தல் பணியாளர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பொது அல்லது இடைத்தேர்தல் பணியின்போது காயமடையும் தேர்தல் பணியாளர்களுக்கும், இறக்கும் தேர்தல் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் வழங்கப்பட வேண்டிய இழப்பீடு குறித்து 2019-ம் ஆண்டு மே மாதம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

 

இந்த நிலையில் கடந்த ஜூலையில் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது. அதில், தேர்தல் பணியில் இருக்கும் ஊழியர் (சி.ஏ.பி.எப். என்ற மத்திய ஆயுதப்படை வீரர் மற்றும் தேர்தல் பணியாளர்கள்) கொரோனா நோயினால் மரணமடைய நேரிட்டால் அவருடைய குடும்பத்தினருக்கும் ரூ.30 லட்சம் இழப்பீட்டை வழங்குவது பற்றி பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வரப்பெற்றன.

எனவே தேர்தல் பணியில் ஈடுபடும் போது கொரோனா நோயினால் உயிரிழக்கும் சி.ஏ.பி.எப். வீரர்கள், பி.இ.எல். அல்லது இ.சி.ஐ.எல். பொறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் ரூ.30 லட்சம் இழப்பீடாக வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் போது எதிர்பாராத விதமாக சமூக விரோதிகள், பயங்கரவாதிகளால் ஏற்படும் வெடிகுண்டு சம்பவங்கள், ஆயுத தாக்குதல் போன்ற வன்முறையில் உயிரிழக்கும் தேர்தல் பணியாளர்களுக்கு இந்த தொகை இழப்பீடாக வழங்கப்படுகிறது. தற்போது கொரோனாவினால் ஏற்படும் இறப்பையும் இந்த பட்டியலில் சேர்த்து அதற்கேற்ற வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் முந்தைய உத்தரவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page