தேசத்துக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்- பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

Spread the love

இந்தியா- சீனா மோதல் விவகாரத்தில் தேசத்துக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.


புதுடெல்லி,

லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. அங்கு அமைதியை ஏற்படுத்த ராணுவம் மற்றும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இருநாட்டு ராணுவ மந்திரிகளும் நேற்று முன்தினம் ர‌ஷியாவில் சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த முக்கியமான பிரச்சினையில் நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது பிரதமர் மற்றும் ராணுவ மந்திரியின் கடமை என காங்கிரஸ் கூறியுள்ளது.

இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் வெளியிட்ட வீடியோ பதிவு ஒன்றில் கூறுகையில், ‘இந்தியா-சீனா இடையே எதைப்பற்றி பேச்சுவார்த்தை நடக்கிறது? என்ன நடக்கிறது? பிரதமரும், ராணுவ மந்திரியும் நாட்டுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவார்களா?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

சீன தரப்பிடம் நமது அரசு மீண்டும் மீண்டும் நடத்தி வரும் இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவு என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், சீனாவின் அத்துமீறல் முறியடிக்கப்பட்டதாக நாம் எப்படி நம்புவது எனவும் சந்தேகம் எழுப்பி உள்ளார்.

இந்த விவகாரத்தில் பிரதமரும், ராணுவ மந்திரியும் நாட்டை நம்பிக்கையின் பாதையில் வழிநடத்துவார்கள் என நம்புவதாகவும், அதுவே உண்மையான ராஜதர்மம் எனவும் குறிப்பிட்டு உள்ளார். மேலும் அவர்களின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page