முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில் துணைக்குழுவை கலைக்க கோரும் மனு வேறு அமர்வுக்கு மாற்றப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழு ஏற்படுத்திய துணை குழுவை கலைக்க வேண்டும் என்று கோரி கேரள மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜோ ஜோசப், ஷீலா கிருஷ்ணன்குட்டி, ஜெஸ்ஸிமோள் ஜோஸ் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான காணொலி அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, தன்னுடைய சகோதரர் முல்லைப்பெரியாறு தொடர்பான வழக்கில் ஏற்கனவே ஆஜராகி இருந்ததால், இந்த வழக்கு விசாரணையில் இருந்து தான் விலகிக்கொள்வதாகவும் கூறியதோடு, இந்த வழக்கை நீதிபதி ரோகின்டன் பாலி நாரிமன் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என்றும் உத்தரவிட்டார்.