மக்கள் பயன்பாட்டுக்காக ரஷிய தடுப்பூசி வினியோகம் தொடங்கியது; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Spread the love

கொரோனாவை தடுக்க மக்களுக்கு பயன்பாட்டுக்காக ரஷிய தடுப்பூசி வினியோகம் தொடங்கியது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோ,

உலகையே கதிகலங்க வைத்திருக்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை தடுத்து நிறுத்துவதற்காக ரஷியாவில் ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமும், கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசியை ரஷியா முறைப்படி பதிவு செய்துள்ளது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையும் தொடங்கி உள்ளது. இந்த சோதனையின்போது 31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போட்டு சோதிக்கப்படுகிறது.

இதற்கு மத்தியில், கொரோனா பாதிப்புக்கு ஆளாகாமல் தடுப்பதற்கு மக்கள் பயன்பாட்டுக்காக இந்த தடுப்பூசியின் வினியோகம் தொடங்கி உள்ளது. இதை ரஷிய சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதையொட்டி ரஷிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பூசியின் முதல் தொகுதி ரஷிய பிராந்தியங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல் வினியோகமானது, தடுப்பூசியை பரவலாக்கும். மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி முதலில் போடப்படும்” என கூறப்பட்டுள்ளது.

உலகிலேயே ரஷியாவில்தான் கொரோனா தடுப்பூசி முதன்முதலாக மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page