கொரோனா அச்சுறுத்தல்: இஸ்ரேலில் மீண்டும் ஊரடங்கு அமல்

Spread the love

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இஸ்ரேலில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜெருசலேம்,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகை உலுக்கி வருகிறது. வைரஸ் வெளிப்பட்டு ஏறக்குறைய 9 மாதங்கள் கடந்து விட்ட போதிலும் தொற்று பரவல் குறைந்தபாடில்லை. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டறியப்படவில்லை. இதனால், உலக நாடுகள் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலிலும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும், கடந்த மே மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டன. ஊரடங்கு தளர்வுகளை அவசர கதியில் பெஞ்சமின் நேதன்யாகூ அரசு அறிவிப்பதாக அப்போதே விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், இஸ்ரேலில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இதையடுத்து, 3 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ அறிவித்தார். அதாவது அக்டோபர் 9 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனவும் மக்கள் தங்கள் இருக்கும் இடத்தை விட்டு 500 மீட்டருக்கு வெளியே செல்ல அனுமதி அளிக்கப்படாது எனவும் இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு உள்ளநாடுகளில் இஸ்ரேல் 24 வது இடத்தில் உள்ளது. அங்கு கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 1.55 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், அங்கு 1,119 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 1.14 லட்சத்தைக் கடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page