நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் கருத்து ஏற்புடையது- சீமான் பேட்டி

Spread the love

நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் கருத்து ஏற்புடையது. அவருக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

பூந்தமல்லி,

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அவரது வீட்டின் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அக்கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காவிரி பிரச்சினைக்காக உயிர்நீத்த விக்னேசு உருவப்படத்துக்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:-

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு தமிழக அரசுக்கு ஆதரவாக இருக்காது. கர்நாடகாவில் காங்கிரஸ், பா.ஜனதா ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளாக இருக்கும்போது கர்நாடக மக்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கும். இவர்கள் அந்தந்த மாநில மக்களின் உணர்வுக்கு ஏற்ப அரசியல் செய்வார்கள். ஆனால் எங்களை இந்திய உணர்வோடு இருக்க சொல்வார்கள். இங்குதான் உள்ளது ஆபத்து.

நீட் தேர்வை எழுத மாட்டோம் என போராடி மாணவர்கள் வெளியே வர முடியாது. வேறு வழியில்லாமல் எழுதுகிறார்கள். இந்தியை இந்தியாவிலேயே எதிர்த்த மாநிலம் தமிழ்நாடுதான்.

நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யா கூறிய கருத்து ஏற்புடையது. சூர்யாவுக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும். அவரது கருத்தை ஆதரித்த நீதிபதிகளுக்கு நன்றி. தமிழனுக்கு இந்த நாட்டை ஆள வேண்டும் என்ற ஆசை வந்து விடக்கூடாது என்பதுபோல், நமது பிள்ளைகள் மருத்துவம் பார்க்கக்கூடாதா? ஆசை இருக்கக்கூடாதா?.

கடுமையான சட்டப்போராட்டம் நடத்தினால் மட்டுமே இதற்கு தீர்வாகும். நீட் தேர்வு தேவையில்லை. வலுவான ஆட்சி உருவானால் மட்டுமே இது சரியாகும். இன்னும் எத்தனை உயிர்கள் போனாலும் இவர்கள் செவிசாய்க்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page