மருத்துவ கல்வி உயர் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு பெற அரசு நடவடிக்கை எடுக்கும்- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Spread the love

மருத்துவ கல்வி உயர் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு பெற அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

சென்னை,

மருத்துவ கல்வி உயர் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு பெற அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

தமிழக சட்டசபையில் நேற்று தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மருத்துவ கல்வி உயர் படிப்பில் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது. அநீதி இழைத்து வருகிறது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்க ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க ஆட்சியில் வழக்கு போடப்பட்டு வெற்றி கிடைத்தது. மத்திய அரசு தற்போது குழு அமைத்துள்ளது. அதில், தமிழக பிரதிநிதியாக துறையின் செயலாளரை அனுப்பாமல் வேறொருவர் அனுப்பப்பட்டுள்ளார். எனவே, துறை செயலாளரை பிரதிநிதியாக அனுப்ப வேண்டும். 50 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்

அதற்கு பதில் அளித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் வழக்கு போடப்பட்டு வெற்றி கிடைத்ததாக சொல்வதை மறுக்கிறோம். நீங்கள் வழக்கில் இணைந்தீர்கள். மருத்துவ கல்வி உயர் படிப்பான எம்.டி., எம்.எஸ். போன்ற படிப்புகளில் 1,922 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் 50 சதவீதம் மத்திய அரசின் இடஒதுக்கீட்டிற்கு சென்று விடும். மத்திய அரசு கமிட்டி அமைக்க நாமினி கேட்டனர். சுகாதாரத்துறையில் நீண்ட காலமாக பணியாற்றியவர் அனுப்பப்பட்டுள்ளார். 50 சதவீதம் இடஒதுக்கீட்டை நிச்சயம் பெற அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page