சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: இன்று விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்

Spread the love

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது

சென்னை,

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தடை செய்யப்பட்ட இந்த புகையிலை பொருட்கள் தாராளமாக தமிழகத்தில் கிடைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். கடந்த 2017-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தி.மு.க.வினர் கொண்டு சென்று சபாநாயகரிடம் காண்பித்தனர்.

இதையடுத்து தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிமைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்து, அந்த நோட்டீசுக்கு தடை பெற்றனர். பின்னர் இந்த வழக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து, கடந்த 7 ஆம் தேதியன்று கூடிய பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான உரிமைக்குழு, ஜூலை 19, 2017 அன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து மீண்டும் விவாதித்ததாகக் கூறி தமிழக சட்டப்பேரவைச் செயலாளர், திமுக எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார். மேலும் செப்டம்பர் 14ம் தேதி அன்று திமுக எம்எல்ஏக்கள் இது குறித்து பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சூழலில் உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் உரிமை மீறல் குழு 2வது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்க்கும் திமுக மனு மீது உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page