சோழிங்கநல்லூர் பழத்தோட்டத்தை தனியார் நிறுவனத்துக்கு கொடுக்கும் முடிவை கைவிட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

Spread the love

சோழிங்கநல்லூர் பழத்தோட்டத்தை தனியார் நிறுவனத்துக்கு கொடுக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூரில் 7 ஏக்கரில் அமைந்துள்ள பழத்தோட்டம் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த குப்பை அகற்றும் நிறுவனத்திற்கு அலுவலகங்களை கட்டவும், வாகன நிறுத்துமிடங்களை அமைக்கவும் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது.

 

இந்த பழத்தோட்டத்தில் மாமரம், பனைமரம், வேப்பமரம் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. வளர்ச்சிப் பணிகளுக்காகக் கூட மரங்களை வெட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் வலியுறுத்தி வருகின்றன. சோழிங்கநல்லூர் பழத்தோட்டம் அமைந்துள்ள பகுதிக்கு அருகிலேயே ஓ.எம்.ஆர். சாலையில் அரசுக்கு சொந்தமாகவும், மாநகராட்சிக்கு சொந்தமாகவும் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருக்கும் நிலையில் பழத்தோட்டத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்குவது ஏன்? அங்குள்ள 250-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட முனைவது ஏன்?

ஏற்கனவே, மிகவும் குறைவான பசுமைப்பரப்பு கொண்ட இந்த பகுதியில் 7 ஏக்கர் அளவில் அமைந்துள்ள பசுமைப்பரப்பை அழித்தால், அது சென்னையின் பசுமை வளத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் இழைக்கப்படும் கேடு ஆகும். எனவே தமிழக அரசும், பெருநகர சென்னை மாநகராட்சியும் சோழிங்கநல்லூர் பழத்தோட்டத்தை தனியார் நிறுவனத்திற்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page