சபரிமலையில் பக்தர்கள் மலையேறும்போது மட்டும் முகக்கவசம் அணிய வேண்டாம்; பினராயி விஜயன் வேண்டுகோள்

Spread the love

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மலையேறும்போது மூச்சுவிட சிரமம் ஏற்படும் என்பதால் பக்தர்கள் முகக்கவசம் அணிய வேண்டாம் என கேரள முதல் மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் அதிகரித்துள்ள கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பள்ளி, கல்லூரி மற்றும் திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டன. போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டது. இதன்பின்னர் பொதுமக்களின் வசதிக்காவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக மதவழிபாட்டு தலங்களை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. எனினும், கொரோனா பரவலால் சில பெரிய கோவில்கள் திறக்கப்பட்ட வேகத்திலேயே மீண்டும் மூடப்பட்டன. இதனால் பக்தர்கள் அவதியுற்றனர்.

இந்த நிலையில், கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் கொரோனா ஊரடங்குக்கு பின்னர் இன்று முதல் பக்தர்களின் தரிசனத்திற்காக மீண்டும் திறக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல் மந்திரி பினராய் விஜயன், மலையேறும்போது முகக்கவசம் அணிந்து இருந்தால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அதனால், பக்தர்கள் அப்போது மட்டும் முகக்கவசம் அணிய வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

ஆனால், மற்ற நேரங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என வலியுறுத்திய அவர், சபரிமலை செல்லும் பக்தர்கள் கும்பலாக மலை ஏற வேண்டாம் என்றும் கிருமிநாசினியை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஏற்கனவே கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்த பக்தர்கள், அதற்கான சான்றுகளுடன் வந்தால் உதவிகரமாக இருக்கும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேபோன்று, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை வைத்திருப்பது அவசியம்.

நாளொன்றுக்கு 250 பேரே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அய்யப்ப பக்தர் மலையேறுவதற்கு தகுதியானவர் என்று உறுதியளிக்கும் மருத்துவ சான்றிதழும் வைத்திருக்க வேண்டியது அவசியம் என நேற்று வெளியிட்ட செய்தியில் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page