நாளை முதல் பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பஸ்கள் இயக்கம் – கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவிப்பு

Spread the love

நாளை முதல் (அக்., 23) பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவித்து உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் இருந்து அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டிய மாநிலங்களுக்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி) சார்பில் தினமும் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கொரோனா பரவலால் பஸ், ரெயில், விமான போக்குவரத்து சேவைகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதன்பின்னர் ஊரடங்கில் தளர்வுகளை செய்த மத்திய அரசு பஸ், ரெயில், விமான போக்குவரத்து சேவைகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கி இருந்தது.

இதையடுத்து கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கர்நாடகத்தில் இருந்து ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு அரசு பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டன. ஆனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்வதால் இந்த 2 மாநிலங்களுக்கு மட்டும் கர்நாடகத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தன.

இந்த நிலையில் புதுச்சேரிக்கு அரசு பஸ்களை இயக்க கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், “ கொரோனா பரவல் காரணமாக கர்நாடகத்தில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த பஸ் சேவையை வருகிற 23-ந் தேதி (நாளை) முதல் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி பெங்களூருவில் இருந்து நாளை முதல் புதுச்சேரிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். இந்த பஸ்சில் பயணம் செய்ய www.ksrtc.in என்ற இணையதள முகவரியில் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page