தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் – கைது 1.50 லட்சத்தை தாண்டியது

Spread the love

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கைது செய்யப்பட்டவரின் எண்ணிக்கை 1.50 லட்சத்தை தாண்டியது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை:

கொரோனா நோயின் பிடியில் மக்கள் சிக்காமல் இருப்பதற்கான தடுப்பு மருந்தாக ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. 21 நாட்கள் அடங்கிய இந்த ஊரடங்கு நேற்று 18-வது நாளாக கடைபிடிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவுக்கு சிலர் அடங்கி வீட்டில் இருந்தாலும், சிலர் தேவையின்றி அன்றாடம் சாலைகளில் சுற்றுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். எனவே ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக போலீசார் ஆங்காங்கே சாலைகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரையில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.50 லட்சத்தை தாண்டியது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி கைது எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரமாக உயர்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 286 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அபார தொகையாக மொத்தம் ரூ.53 ஆயிரத்து 72 ஆயிரத்து 44 வசூலிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 176 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட உள்ளது. எனவே இந்த காலக்கட்டத்தில் ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page