தியேட்டரில் 2 வாரங்கள் மட்டும் புதிய படங்களை வெளியிடுவோம் – டைரக்டர் பாரதிராஜா அறிக்கை

Spread the love

வி.பி.எப். கட்டணம் 2 வாரங்களுக்கு இல்லை என்று டிஜிட்டல் நிறுவனங்கள் தெரிவித்து உள்ளதால் அந்த 2 வாரங்கள் மட்டும் புதிய படங்களை வெளியிடுவோம் என்று பாரதிராஜா அறிவித்து உள்ளார்.


சென்னை,

தமிழ்நாடு திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடுவதற்காகத்தான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்குத்தான்.

வி.பி.எப். சம்மந்தமான எங்கள் சங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவித்திருந்த நிலையில் ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக, டிஜிட்டல் புரஜொக்‌ஷன் நிறுவனங்கள் திடீரென்று வி.பி.எப்-ஐ தற்காலிகமாக 2 வாரங்களுக்கு இல்லை என அறிவித்து இருக்கிறது. நல்லது.

திரையரங்கங்களுடன் எங்களுக்கு பங்காளி சண்டை போன்ற சூழ்நிலை நிலவி வரும் நிலையில், தயாரிப்பாளர்களையோ, திரையரங்கங்களையோ? பாதிப்பது எங்கள் நோக்கமல்ல. பிரித்தாளும் சூழ்ச்சியாக டிஜிட்டல் நிறுவனங்கள் வி.பி.எப்-ஐ விலக்கி இருந்தாலும் அது 2 வாரங்களுக்காவது தயாரிப்பாளர்களுக்கு பயன்படும் பட்சத்தில் இதை எங்கள் சிறு வெற்றியாகவும் கருதி, வி.பி.எப். கட்டணம் இல்லாத இந்த 2 வாரங்கள் மட்டும் எங்கள் திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளோம்.

அதே சமயம் வி.பி.எப். கட்டி படங்கள் திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். விரைவில் நல்ல நிலையான தீர்வை எட்டுவதிலும் உறுதியாக உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

தற்காலிக சமரச தீர்வு ஏற்பட்டு உள்ளதை தொடர்ந்து தீபாவளிக்கு புதிய படங்கள் திரைக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page