மராட்டியத்தில் வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறக்கப்பட்டது.
மும்பை,
மராட்டியத்தில் இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட உள்ளன. இதில் மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் தினந்தோறும் 1000 பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.
கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மராட்டியத்தில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே மாநிலத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. மேலும் இதுதொடர்பாக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியும், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார்.
இந்தநிலையில் இன்று முதல் மாநிலத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று முன்தினம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார். மேலும் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் மராட்டியத்தில் வழிபாட்டு தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்படது. முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். வழிபாட்டு தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி உரிய சோதனைகளுக்கு பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மும்பை சித்தி விநாயகர் கோவிலில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.