பெல்ஜியம் நாட்டில் ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு 2 வயது பெண் புறா புதிய உலக சாதனை படைத்துள்ளது.
நெஸ்செலார்,
பெல்ஜியம் நாட்டில் புறாக்களை கொண்டு பந்தயம் நடத்தப்படுவது பிரபலம். அந்நாட்டில் புறாக்களை வளர்க்கும் ஆர்வலர்கள் எண்ணிக்கை அதிகம். பந்தயத்திற்காகவே வளர்க்கப்படும் புறாக்களை பல்வேறு நாட்டில் இருந்தும் வந்து வாங்கி செல்வார்கள்.
இதற்காக நடத்தப்படும் ஆன்லைன் ஏலத்தில் இன்று நியூ கிம் என்ற 2 வயது பெண் புறா ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இது புதிய உலக சாதனையாகும்.
கடந்த 2ந்தேதி இதன் ஏல தொகை 200 யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதன்பின்னர் ஒன்றரை மணிநேரத்தில் இதன் மதிப்பு 13.1 லட்சம் யூரோக்களாக உயர்ந்தது. தென் ஆப்பிரிக்க குழு ஒன்று இந்த தொகைக்கு ஏலம் கேட்டது.
கடந்த 2019ம் ஆண்டு மார்ச்சில் ஆர்மாண்டோ என்ற ஆண் புறா 12.52 லட்சம் யூரோக்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டது சாதனையாக இருந்தது. இதனை கிம் முறியடித்தது.
ஆனால் ஏலம் கேட்பது இன்றும் தொடர்ந்தது. இதில், ஏலம் முடிய அரை மணிநேரம் இருந்த நிலையில், சீனாவை சேர்ந்த இரு பணக்காரர்கள் கிம்மின் ஏல தொகையை கூடுதலாக உயர்த்தி கேட்டனர். இதன் முடிவில் கிம் 16 லட்சம் யூரோக்களுக்கு ஏலம் போனது. இது இந்திய மதிப்பில் ரூ.14 கோடியாகும்.
பொதுவாக ஆண் புறாக்களை ஏலம் எடுப்பதில் போட்டி அதிகம் இருக்கும். ஏனெனில் அவை அதிக குஞ்சுகளை உருவாக்கும் திறன் படைத்தவை. புறாக்கள் 10 வயது வரை இனப்பெருக்கம் செய்ய கூடியவை. அதனால், கிம் அதிக குஞ்சுகளை பொறிக்கும் சாத்தியம் உள்ளது. கிம் கடந்த 2018ம் ஆண்டில் மட்டுமே பந்தயத்தில் கலந்து கொண்டது. பெல்ஜியத்தின் சிறந்த இளம் பறவை என்ற பட்டமும் பெற்றது.