அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை உடனடியாக சஸ்பெண்டு செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Spread the love

ஊழல் புகாரில் சிக்கிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை உடனடியாக சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


சென்னை,

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி பி.கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும், அந்த துணைவேந்தர், எந்த வித உறுத்தலும் இன்றி, பதவியில் தொடருவது கேலிக்கூத்தாக இருக்கிறது. ஒருவேளை, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு முறை அல்ல பல முறை ஆளான போதும், வழக்குகள் விசாரணைகள் நடைபெறும் போதும் முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் பதவிகளில் தொடர்ந்து இருந்து வரும்போது, நமக்கு மட்டும் என்ன என்ற எண்ணம் காரணமாக இருக்குமோ? என்று மாணவர்கள் மத்தியில் கருத்து ஒன்று சுற்றிக்கொண்டிருக்கிறது. ரூ.280 கோடி ஊழல் புகார் சூரப்பா மீது பிப்ரவரி மாதத்தில் வந்த புகாரை 9 மாதங்களுக்கு மேல் ஏன் நிலுவையில் வைத்திருந்தது அ.தி.மு.க. அரசு? இந்த 9 மாதங்கள் இரு தரப்பிற்கும் இடையில் நடைபெற்ற பேரம் என்ன? என்பது தனி விசாரணைக்குட்பட்டது என்றாலும்; இப்போது ஊழல் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும், துணைவேந்தரை பதவியில் நீடிக்க அனுமதித்திருப்பது, ஒரு கண்துடைப்பு நாடகமே என்று பலரும் வெளிப்படையாகவே பேசுகிறார்கள். ரூ.280 கோடி ஊழல் புகார்களை விசாரிக்க உத்தரவிட்டுள்ள உயர் கல்வித்துறையின் அரசு ஆணையில், “தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டும் ரூ.80 கோடி லஞ்சம் கைமாறியுள்ளது” என்று துணைவேந்தர் சூரப்பா மீதும், அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள துணை இயக்குனர் சக்திநாதன் மீதும் பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. லஞ்சப்பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அரசுக்கு தெரிந்த பிறகும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும் அந்த இருவரையும் தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்டு) செய்யாமல் பாதுகாப்பது ஏன்? ஏன் விதி விலக்கு? ரூ.500 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரை இடைக்கால பணிநீக்கம் செய்து – ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுபோல் விளம்பரப்படுத்தி கொள் ளும் அ.தி.மு.க. அரசு, ரூ.80 கோடி லஞ்சம் வசூல் செய்துவிட்டார்கள் என்று அரசு ஆணையில் குற்றம் சாட்டியும் இதுநாள் வரை துணைவேந்தரையும், துணை இயக்குநரையும் சஸ்பெண்டு செய்யாமல் இருப்பது திரைமறைவில் என்ன பேரம் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை அனைவரது மனங்களிலும் எழுப்பியுள்ளது. கடந்த காலங்களில் இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, தி.மு.க. ஆட்சியில் கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். அதேபோல் அ.தி.மு.க. ஆட்சியின்போது அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இப்போது இவ்வளவு கடுமையான ஊழல் புகாரில், துணைவேந்தராக இருக்கும் சூரப்பாவிற்கு மட்டும் ஏன் விதி விலக்கு?. உடனடியாக சஸ்பெண்டு குறிப்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை ஆணையம் நாளைய தினம் (இன்று) தனது விசாரணையைத் தொடங்கப்போகிறது என்று செய்திகள் வரும் நிலையில் மனசாட்சியை உலுக்கும் ஊழல் புகார்களுக்கு உள்ளான துணைவேந்தரை உடனடியாக சஸ்பெண்டு செய்வதுதான் நேர்மையான – நியாயமான விசாரணைக்கு வழிவிடும். ஆகவே அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பாவை இனியும் காலதாமதம் இன்றி உடனடியாக சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன். அது மட்டுமின்றி, ஊழல் புகார் கள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் அழிக்கப்பட்டுவிடாமல் இருக்க உடனடியாக அவை அனைத்தையும் விசாரணை ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page