தேர்வாய்கண்டிகை நீர்தேக்கம், மெட்ரோ ரெயில் திட்டம் உள்பட மத்திய-மாநில அரசுகளின் 8 திட்டங்களை அமித்ஷா தொடங்கி வைக்கிறார்

Spread the love

தேர்வாய்கண்டிகை புதிய நீர்தேக்கம், மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டம் உள்பட மத்திய-மாநில அரசுகளின் 8 திட்டங்களை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான விழா எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது.


சென்னை,

திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை புதிய நீர்த்தேக்கத் திட்டத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா, சென்னை மெட்ரோ ரெயில் திட்டம்-2 மற்றும் பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற 21-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றுகிறார். தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலை வகிக்கிறார். தமிழக அரசின் தலைமைச்செயலாளர் க.சண்முகம், வரவேற்புரையாற்றுகிறார். தொழில்துறை முதன்மைச் செயலாளர் என்.முருகானந்தம் நன்றி கூறுகிறார்.

அமித்ஷா அடிக்கல் நாட்டுகிறார்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். அவர், திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பீட்டிலான புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தும், ரூ.61 ஆயிரத்து 843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டம், கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் ரூ.1,620 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட சாலைத் திட்டம், கரூர் மாவட்டம் நஞ்சை புகலூரில் ரூ.406 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம், ரூ.309 கோடி மதிப்பீட்டில் சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் திட்டங்களான வல்லூரில் ரூ.900 கோடி மதிப்பீட்டில் பெட்ரோலியம் முனையம், அமுல்லைவாயலில் ரூ.1,400 கோடி மதிப்பீட்டில் ‘லூப் பிளான்ட்’ அமைத்தல் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் ரூ.900 கோடி மதிப்பீட்டில் புதிய இறங்கு தளம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டி பேசுகிறார்.

இந்த விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி, வாரியத் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page