கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பூசிகளில் இந்தியாவுக்கு ஏற்றது எது என்பது குறித்து விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன. அமெரிக்காவின் பைசர் தடுப்பூசி 90 சதவீதம், மாடர்னா தடுப்பூசி 94.5 சதவீதம், ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 92 சதவீதம் செயல்திறனை கொண்டவை என தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த தருணத்தில் கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பூசிகளில் இந்தியாவுக்கு ஏற்றது எது என்பது குறித்து விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசியை சேமித்து வைப்பதற்கான வெப்பநிலையை கருத்தில் கொண்டு, புரோட்டின் அடிப்படையிலான தடுப்பூசியே நமது நாட்டுக்கு சிறப்பாக செயல்படும் என அவர்கள் கூறி உள்ளனர். அந்த வகையில் இந்திய வெப்ப நிலைக்கு ஏற்றது, அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி என அவர்கள் கருதுகின்றனர். இந்த தடுப்பூசியை சேமித்து வைப்பதற்கு மிக குறைந்த வெப்ப நிலை தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்த நிலையில், அமெரிக்காவின் நோவாவேக்ஸ் தடுப்பூசியும் இந்தியாவுக்கு ஏற்றதாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் தடுப்பூசியின் பாதுகாப்பு, விலை, சேமிப்பு வசதி உள்ளிட்ட பல அம்சங்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு முடிவு எடுக்கும் என தகவல்கள் கூறுகின்றன.