விவசாயிகளுக்காக காசு வாங்காமல் சுப்ரீம் கோர்ட்டில் போராட தயார்: வழக்கறிஞர் தவே பேட்டி

Spread the love

விவசாயிகளுக்காக காசு வாங்காமல் சுப்ரீம் கோர்ட்டில் போராட தயார் என சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் பேட்டியில் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

விவசாயிகளின் நலனிற்காக மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் சார்பில் டெல்லி சலோ (டெல்லி நோக்கி பேரணியாக செல்லுதல்) போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த நவம்பர் 26ந்தேதி பேரணியாக திரண்டனர். தொடர்ந்து போராட்டம் நீடித்து வருகிறது.

இந்த சூழலில் சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான சங்க உறுப்பினர்களை சந்தித்து பேசினார்.

இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, விவசாயிகள் எந்த வழக்கிலாவது உயர் நீதிமன்றத்திலோ மற்றும் சுப்ரீம் கோர்ட்டிலோ போராட விரும்புகிறார்கள் என்றால், அவர்களுக்காக காசு வாங்காமல் வாதிட நான் தயாராக இருக்கிறேன். விவசாயிகளுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன் என கூறியுள்ளார்.

இதுபற்றி மற்றொரு வழக்கறிஞரான பூல்கா செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, விவசாயிகளுக்கு சட்டபூர்வ முறையில் உதவ முன்வந்த தவேவுக்கு நாம் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

இந்த சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கானது இல்லை என நாட்டின் மூத்த வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள் என்றால் அதுபற்றி அரசு சிந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page