கொரோனாவால் பலியானோர் குடும்பத்துக்கு இழப்பீடு கோரும் மனு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Spread the love

கொரோனாவால் பலியானோர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரும் மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


புதுடெல்லி, மே.25-

பொதுநல மனு

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்கள் கவுரவ் பன்சல், ரீபக் கன்சல் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் அல்லது கொரோனா தொற்றால் இறந்தார் என தெரிவிக்கும் அரசு ஆவணத்தை வழங்கிட மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரையும், இறப்பவர்களின் குடும்பத்தாரையும் கவனித்துக்கொள்ளும் கடமையை நிறைவேற்ற மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

நியாயமல்ல

கொரோனா-19 என்ற தொற்றுநோய், பேரிடர் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் 12-வது பிரிவில், பேரிடரால் பாதிக்கப்படுவோருக்கும், உயிரிழந்த குடும்பங்களுக்கும் நிதியுதவி வழங்கத் தேவையான பரிந்துரைகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கொரோனாவால் பலியானவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டை மத் திய, மாநில அரசுகள் வழங்காமல் இருப்பது நியாயமல்ல.

மத்திய அரசுக்கு உத்தரவு

இதுபோன்ற பேரிடரின்போது இறப்பவர்களுக்கு, தேசிய பேரிடர் மேலாண்மை நிதி அல்லது மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்குவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அந்த மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன் நேற்று நடைபெற்றது. மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 11-ந் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page