குவைத்தில் இருந்து மங்களூருவுக்கு 190 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் வந்தது; இந்திய கடலோர காவல் படை கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டது

Spread the love

குவைத்தில் இருந்து மங்களூருவுக்கு 190 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டது.


கொரோனா வைரஸ்
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து உள்ளது. அதனால் ஏற்படும் உயிர்ப்பலியும் அதிகரித்து இருக்கிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆக்சிஜன் பிரச்சினையால் சிக்பள்ளாப்பூர், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான கொரோனா நோயாளிகள் மூச்சு திணறி பலியானார்கள்.இதையடுத்து மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. இதுதொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் மந்திரிகள் மத்திய அரசிடம் தெரிவித்து கர்நாடகத்திற்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

190 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன்
இதையடுத்து மத்திய அரசு சார்பில் குவைத் நாட்டில் இருந்து 190 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் பெறப்பட்டது. இந்த ஆக்சிஜன் 1,200 சிலிண்டர்களிலும், 60 கன்டெய்னர்களிலும் நிரப்பப்பட்டு குவைத் நாட்டில் இருந்து அனுப்பப்பட்டது. குவைத் நாட்டில் இருந்து இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சர்துள் என்ற கப்பல் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கன்டெய்னர்கள் கொண்டுவரப்பட்டது.நேற்று அந்த கப்பல் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்தது. பின்னர் துறைமுகத்தில் இருந்து பிரத்யேக லாரிகள் மூலம் ஆக்சிஜன்
சிலிண்டர்களும், கன்டெய்னர்களும் கொண்டு செல்லப்பட்டு தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

பகிர்ந்து கொள்ள உள்ளன
இந்த 190 மெட்ரிக் டன் ஆக்சிஜனையும் கர்நாடக அரசும், கேரள அரசும் பகிர்ந்து கொள்ள உள்ளது. இதற்கான வழிகாட்டுதலை ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய அரசு அறிவிடுத்துள்ளதுபடி கர்நாடக அரசும், கேரள அரசும் ஆக்சிஜனை பகிர்ந்து தங்கள் மாநில அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்க உள்ளன.இதன்மூலம் கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் பிரச்சினை ஓரவுளவுக்கு கட்டுக்குள் வரும் என்றும், இன்னும் பல நாடுகளில் இருந்து ஆக்சிஜன் பெறப்பட உள்ளதாகவும் தட்சிண கன்னடா மாவட்ட சுகாதார துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page